நம்முடைய
இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால்
காட்டித்தராத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள், வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால்
காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம்
பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று
வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.
இதில்
என்ன ஆச்சரியம் என்றால் இதைச் செய்யும் சுன்னத் வல் ஜமாஅத்தினரைச் சார்ந்த
உலமாக்கள் குர்ஆன், ஹதீஸை விட
மத்ஹபுகளுக்குத் தான் முன்னுரிமை வழங்குவார்கள். அந்த மத்ஹப் புத்தகங்களில்
இவர்கள் செய்கின்ற இச்செயலுக்கு முரணாக கூறப் பட்டுள்ளது தான் வேடிக்கை.
பராஅத்
இரவு வணக்கத்தை மத்ஹப் ஆதரிக்கிறதா?
ரஜப்
மாதத்தில் முதல் ஜும்ஆ இரவில் மஃரிபுக்கும் இஷாவிற்கும் இடையில் 12 ரக்அத் கொண்ட தொழுகையும், ஷஅபான் மாதத்தில்
நடுப்பகுதி 15ஆவது இரவில் தொழும் 100
ரக்அத்கள் கொண்ட தொழுகையும் இழிவாக்கப்பட்ட அனாச்சாரங்களாகும். இதை செய்யக்
கூடியவர் பாவியாவார். இதை (தொழுகையை) தடுப்பது பொறுப்பாளர்கள் மீது கட்டாயமாகும்.
(இச்செய்தி ஷாபி மத்ஹபின் 'இஆனதுல் தாலிபீன்' என்ற புத்தகத்தில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில்
இருக்கின்றது)
மக்களிடம்
அறிமுகமான ஷஃபான் பிறை 15ல் (இவர்களால்
உருவாக்கப்பட்ட 100 ரக்அத்கள்) தொழும் தொழுகையும் ஆஷுரா
தினமன்று தொழும் தொழுகையும் மோசமான அனாச்சாரங்களாகும். இது சம்பந்தமாக வரும்
அனைத்து ஹதீஸ்களும் இட்டுக்கட்டப் பட்டவைகளாகும்.
(இச்செய்தி ஷாஃபி மத்ஹபின் பத்ஹுத் முயீனில் முதல் பாகத்தில் 27ம் பக்கத்தில் பதிவாகியுள்ளது.)
பராஅத்
இரவன்று பள்ளி வாசல்களிலும் வீதிகளிலும் கடை வீதிகளிலும் மின் விளக்குகளை வைப்பது
(பித்அத்) அனாச்சாரமாகும் என்று ஹனஃபி மத்ஹபின் 'பஹ்ருர் ராஹிக்' என்ற புத்தகத்தில் 5ஆம் பாகத்தில் 232ஆம் பக்கத்தில் கூறப் பட்டுள்ளது.
மத்ஹப்
புத்தகங்களைப் பின்பற்றும் அறிஞர்கள் இதை ஏன் பின்பற்று வதில்லை?
இவர்கள் குர்ஆன், ஹதீஸையும் பின்பற்றவில்லை; மத்ஹபுகளையும்
பின்பற்றவில்லை. மறுமையில் என்ன செய்யப் போகிறார்களோ? அல்லாஹ்
இவர்களை காப்பாற்றுவானாக!
பராஅத்
அன்று நோன்பு நோற்கலாமா?
ஷஅபான்
பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராமாகும். ஏனெனில் ''ஷஅபான் பாதியாகி விட்டால் நீங்கள் நோன்பு நோற்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது ஆதாரப்பூர்வமாக இடம் பெற்றுள்ளது.
(நூல்: ஷாஃபி மத்ஹபின் இயானதுத் தாலிபீன், பாகம்: 2,
பக்கம்: 273)
ஏன்
இந்த சிறப்பு?
அன்றைய
தினம் இந்த அளவுக்கு என்ன தான் சிறப்பு என்கிறீர்களா?
அன்று தான் ஷஃபான் பிறை 15ல் வரும் பராஅத்
இரவாம். அந்த இரவை புனிதமிக்க இரவாக மாற்ற புதுப் புது பாத்திஹாக்களை உருவாக்கி, வித்தியாசமான முறையில்
அலங்கரித்து வடிமைத்துள்ளார்கள் நவீன கால பராஅத் அறிஞர்கள்.
இத்தனை
ஆர்ப்பாட்டங்களும் எதற்காகத் தெரியுமா?பராஅத்
இரவு கொண்டாடுவதை மார்க்கம் என்று கருதியதால் தான். அது மாத்திரமின்றி ஒரு
கேள்வியும் கேட்கின்றனர். சிறப்பான இரவில் நற்செயல் செய்வது தவறா? என்பது தான் அக்கேள்வி.
மார்க்கத்தில்
ஒரு காரியம் உள்ளது என்றும், இல்லாதது
என்றும் சொல்வதற்கு எவருக்கும் எந்த அதிகாரமுமில்லை. இவர்கள் செய்யக் கூடிய இந்த
வணக்கம் குர்ஆனில் சொல்லப்பட்டுள்ளதா? அவனால் குர்ஆனை
தெளிவுபடுத்த அனுப்பப் பட்ட தூதரான முஹம்மத் (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களா?
அல்லது கூறியுள்ளார்களா? அல்லது ஸஹாபாக்கள்
செய்ய நபி (ஸல்) அவர்கள் அங்கீகரித்துள்ளார்களா? என்றால்
நிச்சயமாக இல்லை.
பராஅத்
இரவுக்கும் அதற்கான வணக்கங்களுக்கும் ஆதாரம் என்ற பெயரில் ஒரு சில தப்பான
விளக்கங்களும் பலவீனமான, இட்டுக் கட்டப்பட்ட
ஹதீஸ்களையும் கூறி, பாருங்கள்! இஸ்லாத்தில் சொல்லப்
பட்டுள்ளது என்று கூறுகின்றனர்.
இவர்கள்
மறுமையை அஞ்சிக் கொள்ளட்டும்! இவர்கள் காட்டும் அனைத்து செய்திகளும் பலவீன மானவை
அல்லது இட்டுக்கட்டப் பட்டவை. இக்கருத்து அவர்களின் மத்ஹப் நூல்களிலேயே கூறப்
பட்டுள்ளது. சில ஆதாரங்கள் இவர்கள் தவறாக விளங்கியவையாகும்.
முதல்
ஆதாரம்
தெளிவான
இவ்வேதத்தின் மீது சத்தியமாக! இதை பாக்கியம் நிறைந்த இரவில் நாம் அருளினோம். நாம்
எச்சரிக்கை செய்வோராவோம்.அதில் தான் உறுதியான காரியங்கள் யாவும்
பிரிக்கப்படுகின்றன. (அல்குர்ஆன் 44:2லி4)
இவ்வசனத்தில்
கூறப்பட்டுள்ள பாக்கியமுள்ள இரவு, பராஅத் இரவு
தான் என்பது தான் இவர்களின் வாதம். திருக்குர்ஆனை பொறுத்தமட்டில் ஒரு வசனத்தின்
விளக்கத்தை இன்னொரு வசனம் அல்லது ஹதீஸ் விளக்கும். அந்த அடிப்படையில் இந்த
வசனத்தில் உள்ள பாக்கியமுள்ள இரவு
எது? என்பதைத் தெளிவுபடுத்தும் வகையில் பின்வரும்
வசனங்கள் அமைந்துள்ளன.
மகத்துவமிக்க
இரவில் இதை நாம் அருளினோம். (அல்குர்ஆன் 97:1)
அது
லைலத்துல் கத்ர் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். அந்த இரவு ரமலான் மாதத்தில்
தான் உள்ளது என்று பின்வரும் வசனம் விளக்குகின்றது.
இந்தக்
குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி
காட்டும்.நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக்
காட்டும்.உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். (அல்குர்ஆன் 2:185)
இந்த
மூன்று வசனங்களிலிருந்து பாக்கியமிக்க இரவு என்பது ரமலான் மாதத்தில் உள்ள லைத்துல்
கத்ரைக் குறிக்கிறதே தவிர ஷஃபான் மாதத்தின் 15ஆம்
இரவு அல்ல என்பது மிகத் தெளிவாகத்தெரிகின்றது. எனவே பராஅத் இரவுக்கும் இவர்கள்
காட்டும் வசனத்திற்கும் எந்த
சம்பந்தமுமில்லை.
இரண்டாம்
ஆதாரம்
ஷஃபான்
மாதத்தில் பாதி இரவு வந்து விட்டால் அதில் நீங்கள் நின்று வணங்குங்கள்.அந்தப்
பகலில் நோன்பு பிடியுங்கள். அந்த இரவில் இறைவன் வானத்திலிருந்து இறங்கி வந்து,
பாவ மன்னிப்பு தேடுவோர் உண்டா? நான் அவர்களின்
பாவங்களை மன்னிக்கிறேன். சோதனைக்கு
ஆளானோர் உண்டா? நான் அவர்களின் துன்பங்களை போக்குகின்றேன்.
என்னிடம் கேட்கக் கூடியவர் உண்டா? நான் அவர்களுக்கு
உணவளிக்கிறேன் என்று காலை வரை கூறிக் கொண்டேயிருக்கிறான் என்று நபி (ஸல்) அவர்கள்
கூறினார்கள்.அறிவிப்பவர்: அலீ (ரலி) நூல்: இப்னுமாஜா 1378
இது
ஆதாரபூர்வமான ஹதீஸல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் 'இப்னு அபீ ஸப்ரா' என்பவர் இடம் பெறுகிறார். இவர்
பலவீனமானவர் என்று இமாம் அஹ்மதும், இப்னுல் மயீனும்
கூறியுள்ளார்கள்.
மூன்றாம்
ஆதாரம்
அன்னை
ஆயிஷா (ரலி) அவர்கள் ஒரு நாள் இரவு, படுக்கையில்
நபி (ஸல்) அவர்களை காணாமல் வெளியே தேடி வந்தார்கள். அப்போது அவர்கள் பகீஹ் என்ற
இடத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஷஅபான் மாதம்
15ஆம் இரவில் அல்லாஹ் முதல் வானத்திற்கு இறங்கி கல்ப்
கோத்திரத்தாரின் ஆட்டு ரோமத்தின் எண்ணிக்கை அளவுக்கு (பாவங் களை) மன்னிக்கின்றான்
என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: திர்மிதி 670
இந்த
ஹதீஸும் ஆதாரப் பூர்வமானது அல்ல என்பதே உண்மை.
இதில் அறிவிப்பாளர் தொடரில் வரும் யஹ்யா பின் அபீ கஸீர் என்பவர் 'உர்வா' விடமிருந்து கேட்கவில்லை. அதே போன்று ஹஜ்ஜாஜ்
பின் அர்தாத் என்பவர் யஹ்யா பின் அபீ கஸீரிடமிருந்து செவியேற்கவில்லை என்று இமாம்
புகாரீ கூறிய கருத்தை பதிவு செய்து, இது பலவீனமான செய்தி
என்பதை இந்த ஹதீஸைப் பதிவு செய்த திர்மிதி இமாம் அவர்களே தெளிவாக சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
நான்காவது
ஆதாரம்
நபி
(ஸல்) அவர்கள் ஷஃபான் மாதத்தில் அதிக நோன்பு நோற்பதை போன்று வேறு எந்த மாதத்திலும்
நோற்பவராக இருக்கவில்லை. ஏனெனில் (வரும்) வருடத்தில் மரணிக்கக் கூடியவர்களின்
தவணைகள் அம்மாதத்திலே மாற்றப்பட்டு விடும் என்பதனால் தான்.
அறிவிப்பாளர்:
அதாஹ் பின் யஸார்,நூல்: முஸன்னப்
இப்னு அபீஷைபா 9764, ஃபலாயிலுர் ரமலான் லி இப்னு அபித் துன்யா
இத்தொடரில்
வரும் அதாஹ் பின் யஸார் என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்)
அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி
முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
ஐந்தாவது
ஆதாரம்
ரமலான்
மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும்
ஷஃபான் மாதம் நடுப்பகுதி 15ஆம் இரவிலும் சூரதுல் இக்லாஸ்
எனும் சூராவை 1000 தடவை ஓதி எவர் 100
ரக்அத் தொழுகின்றாரோ அவருக்கு சொர்க்கத்தைக் கொண்டு நன்மாராயம் சொல்லப்படும் வரை
அவர் மரணிக்க மாட்டார்.
அறிவிப்பவர்:
முஹம்மத் பின் அலீநூல்: ஃபலாயிலு ரமலான்லி இப்னு அபித் துன்யா 9
இத்தொடரில்
வரும் முஹம்மத் பின் அலீ என்பவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழாதவர். நபி (ஸல்)
அவர்களுக்கும் இவருக்கும் மத்தியில் அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார். இச்செய்தி
முர்ஸல் என்ற தரத்தில் உள்ள பலவீனமான செய்தியாகும்.
முதல்
யாசீன் பாவ மன்னிப்பிற்காக
இரண்டாவது
யாசீன் கப்ராளி களுக்கு ஹதியாவாகவும், உயிர்
நீடிப்பிற்காகவும்
மூன்றாவது
யாசீன் பரகத் கிடைக்க வேண்டியும் ஆக மொத்தம் மூன்று யாஸீன் ஓதப்படும்.
அது
மாத்திரமல்ல! வழமை போல் 8 மணிக்கு நடைபெறும்
இஷா தொழுகை அன்றிரவு மாத்திரம் இரவு 10 மணிக்கு நடைபெறும்.
காரணம் ஹஜரத்திற்கு வந்த பாத்திஹா ஆர்டர்களை முடித்து விட்டு, இரவு 8 மணிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வந்து சேர முடியாத
நிலை. அல்லாஹ்வால் கடமையாக்கப்பட்ட தொழுகையை விட யாரோ உருவாக்கிய பராஅத் இரவு
சிறந்ததாகப் போச்சு, ஏழு வருடம் படித்த மார்க்க அறிஞருக்கு?
அந்நாளில்
விசேஷத் தொழுகையும் நடைபெறும்.எத்தனை ரக்அத்கள் தெரியுமா?
100 ரக்அத்களாம். வேறு சில ஊர்களில் இதை விட அதிக ரக்அத்கள் கொண்ட
தொழுகையும் உண்டு.
பராஅத்
இரவுக்கு இவர்கள் காட்டும் ஆதாரங்கள் ஒன்று கூட ஆதாரப்பூர்வமானவை அல்ல! எனவே
இவர்கள் புதுமையான ஒரு காரியத்தை உருவாக்கியுள்ளார்கள்.
இவர்கள்
பின்வரும் நபிமொழிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வின்
தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம்முடைய இந்த மார்க்க விவகாரத்தில் அதில்
இல்லாததை புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ அவனுடைய அந்தப் புதுமையான காரியம்
நிராகரிக்கப்படும்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)நூல்: புகாரி 2697
நமது
அனுமதியில்லாமல் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்)
அவர்கள் எச்சரித்துள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 3243)
எனவே
இத்தூய்மையான மார்க்கத்தில் அனைத்தும் மிகத் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது. அதில்
கூட்டவோ குறைக்கவோ யாருக்கும் அனுமதியில்லை.
அப்படி
அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தராத ஒன்றை எவனாவது ஒருவன் மார்க்கம் என்று
செய்தால் அது நிராகரிக்கப்படுவதோடு அதைச் செய்தவர் நரகத்தில் புகுவார். இது
நபிகளாரின் எச்சரிக்கையாகும்.
மறுமையை
நம்பியவர்களே!உங்களைப் பாவியாக்கும் பராஅத் இரவைத் தூக்கி எறிந்து விட்டு
இறைவனாலும் இறைத்தூதராலும் காட்டித் தரப்பட்ட தூய இஸ்லாத்தைப் பின்பற்ற எல்லாம்
வல்ல இறைவன் நமக்குத் துணை புரிவானாக!