இந்த இணையதளத்திற்கு வருகை தரும் உங்கள் அனைவருக்கும் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ

Sunday 17 June 2012

இஸ்லாத்தில் குழந்தை வளர்ப்பு



ஆசிரியர்கள் சிறுவர்களுக்குப் பாடம் போதிப்பதைப் போல்
, ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் தம் மக்களுக்குப் பின்வரும் (பிரார்த்தனை) வாசகங்களைக் கற்றுக் கொடுத்தார்கள்:
''அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி (இறைவா! நான் கோழைத்தனத்தலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மூப்பின் மோசமான நிலையை அடைவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன். உலகின் சோதனைகளிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகின்றேன். புதைகுழியின் வேதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறிவிட்டு ''இந்த விஷயங்களிலிருந்தெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தொழுகைக்குப் பின்பு பாதுகாப்புக் கோரி வந்தார்கள்'' என்றும் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அம்ர் பின் மைமூன் நூல்: புகாரீ (2819)
இவ்வுலகத்தில் பிறக்கும் எந்தக் குழந்தையும் கெட்ட குழந்தையாக பிறப்பதில்லை. எல்லா குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகத் தான் பிறக்கின்றன.
அவர்களது பெற்றோர்களின் வளர்ப்பு தான் அவர்களை நல்லவனாக அல்லது கெட்டவனாக மாற்றி விடுகிறது. (பார்க்க புகாரி 1385)
இந்த ஹதீஸின் அடிப்படையில் குழந்தைகளை நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கு பெற்றோர்கள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள் என்பதை விளங்கலாம்.
எனவே நல்ல குழந்தைகளாக உருவாக்குவதற்கான முழு முயற்சிகளை மேற்கொள்வது பெற்றோர்களின் கடமையாகும்.
மனித இனத்திற்கு வழிகாட்டியாக வந்த இறைத் தூதர்கள் தம் குழந்தைகளை மார்க்கப் பற்றுள்ள குழந்தைகளாக உருவாக்குவதற்குத் தங்களால் ஆன முயற்சிகளைச் செய்துள்ளார்கள் என்பதைத் திருக்குர்ஆன் தெளிவு படுத்துகிறது.
''என் மக்களே! அல்லாஹ் உங்களுக்காக இம்மார்க்கத்தைத் தேர்வு செய்துள்ளான். முஸ்லிம் களாகவே தவிர நீங்கள் மரணிக்கக் கூடாது'' என்று இப்ராஹீமும், யஃகூபும் தமது பிள்ளைகளுக்கு வலியுறுத்தினர். (அல்குர்ஆன் 2:132)
இப்ராஹீம் நபியும் யஃகூப் நபியும் தன் குழந்தைகளிடம், ''வாழும் நாட்களில் நீங்கள் முஸ்லிம்களாக வாழ வேண்டும். உங்களுக்கு மரணம் வரும் போதும் முஸ்லிம்களாகவே இருக்க வேண்டும்'' என்பதைத் தெளிவாக, தம் குழந்தைகளுக்கு விளக்கியுள்ளார்கள்.
இதைப் போன்று லுக்மான் (அலை) அவர்களும் தம் குழந்தைகளுக்கு அல்லாஹ்வின் வல்லமை, இணை வைப்பின் பயங்கரம், தொழுகையின் முக்கியத்துவம், நன்மையை ஏவி, தீமையை தடுப்பதன் அவசியம், பொறுமையின் சிறப்பு, ஆணவத்தின் கடுமை என்று ஏராளமான விஷயங்களைக் கற்றுக் கொடுத்ததாக திருக்குர்ஆன் கூறுகிறது.
லுக்மான் தமது மகனுக்கு அறிவுரை கூறும் போது ''என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மகத்தான அநீதியாகும்'' என்று குறிப்பிட்டதை நினைவூட்டுவீராக!
மனிதனுக்கு அவனது பெற்றோரைக் குறித்தும் வலியுறுத்தி உள்ளோம். அவனை அவனது தாய் பலவீனத்துக்கு மேல் பலவீனப் பட்டவளாகச் சுமந்தாள். அவன் பாலருந்தும் பருவம் இரண்டு ஆண்டுகள். எனக்கும், உனது பெற்றோருக்கும் நன்றி செலுத்து வாயாக! என்னிடமே திரும்பி வருதல் உண்டு.
உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்கும் படி அவ்விரு வரும் உன்னைக் கட்டாயப்படுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! இவ்வுலகில் அவர்களிடம் அழகிய முறையில் தோழமை கொள்! என்னை நோக்கித் திரும்பியோரின் வழியைப் பின்பற்று! பின்னர் உங்கள் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பேன்.
என் அருமை மகனே! கடுகு விதை அளவு (ஒரு பொருள்) இருந்து அது பாறைக்குள்ளேயோ, வானங்களிலோ, பூமியிலோ இருந்தாலும் அதை அல்லாஹ் கொண்டு வருவான். அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.
என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.
மனிதர்களை விட்டும் உனது முகத்தைத் திருப்பிக் கொள்ளாதே! பூமியில் கர்வமாக நடக்காதே! கர்வம் கொண்டு பெருமையடிக்கும் எவரையும் அல்லாஹ் விரும்ப மாட்டான்.
''நீ நடக்கும் போது நடுத்தரத்தைக் கடைப் பிடி! உனது குரலைத் தாழ்த்திக் கொள்! குரல்களில் வெறுக்கத்தக்கது கழுதையின் குரலாகும்'' (என்றும் அறிவுரை கூறினார்). (அல்குர்ஆன் 31:13-19)
இறைத் தூதர்களின் இந்த வழி காட்டுதல்களின் அடிப்படையில் நடந்தவர்களில் ஒருவர் தான் ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள். நபி (ஸல்) அவர்களால் சுவர்க்கவாதி என்று முன்னறிவிப்புச் செய்யப் பட்டவர்கள். தம் குழந்தையை இஸ்லாமிய முறைப்படி வளர்ப்பதில் முக்கியத்துவமும் அதிக அக்கறையும் எடுத்துள்ளார்கள் என்பதற்கு நாம் முதலில் எடுத்துக் காட்டிய ஹதீஸ் சான்றாக உள்ளது.
ஸஅத் (ரலி) அவர்கள் தன் குழந்தைக்கு மார்க்கக் கல்வியை எவ்வாறு படித்துக் கொடுத்துள்ளார்கள் என்பதை நாம் எடுத்துக் காட்டிய செய்தி மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.
ஒரு ஆசிரியர் ஒரு மாணவனுக்கு எழுதும் பயிற்சியை எவ்வாறு கற்றுத் தருவாரோ  அவ்வாறு கவனமாகவும் கண்டிப்புடன் மார்க்கத்தைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
பொதுவாகக் குழந்தைகளிடம் பெற்றோர்கள் கண்டிப்புடன் நடந்து கொள்ள மாட்டார்கள். இதைப் போன்று ஆசிரியர்களைப் பார்த்துப் பயப்படும் குழந்தைகள் பெற்றோர்களைப் பார்த்து பயப்படுவதில்லை.
மார்க்க விஷயத்தில் இந்நிலையில் தன் குழந்தைகள் இருக்கக் கூடாது என்பதை அறிந்து ஸஅத் (ரலி) அவர்கள் கண்டிப்புடன் கவனமாகத் தன் குழந்தைகளுக்கு நபிகளார் கற்றுத் தந்த ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு ஓத வேண்டிய 'அல்லாஹும்ம இன்னீ அஊது பிக்க மினல் ஜுப்னி, வஅஊது பிக்க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅஊது பிக்க மின் ஃபித்னத்தித் துன்யா, வ அஊது பிக்க மின் அதாபில் கப்ரி' என்ற இந்த துஆவைக் கற்றுக் கொடுத்துள்ளார்கள்.
பிள்ளைகள் டாக்டராக வர வேண்டும், பொறியாளராக இருக்க வேண்டும் என்று ஆசைப்படும் நாம், என் குழந்தைகள் சுவர்க்கத்திற்கு உரியவர்களாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டுள்ளோமா? அதற்குரிய நடவடிக்கையை எடுத்துள்ளோமா?
சினிமா, நாடகம் என்று மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் ஈடுபடும் பிள்ளைகளை மார்க்க சிந்தனையின் பக்கம் நாம் திருப்ப வேண்டும்.
நம் குழந்தைகள் மறுமையில் சுவர்க்கத்திற்குச் செல்ல வேண்டும் என்பதற்குரிய அனைத்து ஏற்பாடு களையும் நாம் செய்ய வேண்டும்.
· ஓரிறைக் கொள்கை
· இஸ்லாத்தின் அடிப்படை குர்ஆனும், ஹதீசும் தான்
· இஸ்லாத்தின் வழிகாட்டி நபிகளார் மட்டுமே!
· தொழும் முறை
· திருக்குர்ஆன் ஓதுதல்
போன்ற காரியங்களை சிறு வயதிலேயே நாம் கற்றுக் கொடுத்து இஸ்லாமிய குழந்தையாக உருவாக்க வேண்டும்.
மறுமை நாள் ஏற்படும் போது நாம் எவ்வளவு தான் பாசம் வைத்திருந்தாலும் அவர்களைக் காப்பாற்ற முடியாது. மறுமை நாளில் ஒவ்வொருவரும் தம் நிலையைத் தான் பார்ப்பார்களே தவிர அடுத்தவர்களைப் பற்றி நினைக்க மாட்டார்கள். அவர்கள் பிள்ளையாக இருந்தாலும், தாயாக இருந்தாலும் சரியே!
அந்தச் சப்தம் ஏற்படும் அந்த நாளில் மனிதன் தனது சகோதர னையும், தனது தாயையும், தனது தந்தையையும், தனது மனைவியையும், தனது பிள்ளைகளையும் விட்டு ஓடுவான்.
அந்நாளில் அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும் முழுக் கவனத்தை ஈர்க்கும் காரியம் உண்டு.
அந்நாளில் சில முகங்கள் ஒளி வீசும். மகிழ்ச்சியுடன் சிரித்துக் கொண்டிருக்கும்.
அந்நாளில் சில முகங்கள் மீது புழுதி படிந்திருக்கும். அதைக் கருமை மூடியிருக்கும்.  அவர்களே (ஏக இறைவனை) மறுப்போரான பாவிகள். (அல்குர்ஆன் 89:33-42)
உண்மையில் தம் குழந்தையின் மீது பாசம் வைத்திருப்பவர்களாக இருந்தால் மறுமை நாளில் தண்டனை ஏற்படாமல் இருப்பதற்கு ஸஅத் (ரலி) அவர்களைப் போன்று, இவ்வுலகிலேயே நல்ல குழந்தையாக மாற்ற அனைத்து ஏற்பாடுகளையும் செய்வோம்.

No comments:

Post a Comment